ஓவியங்கள் ஊடாகக் கட்டடக்கலை

ஓவியங்கள் வழியாக கட்டடக்கலையை ரசித்த ஒரு சிறு பிள்ளையின் கனவு இது. தன் தந்தையார் ஒரு ஓவியராக பணி புரிந்தபோது, அவரை காண வந்த பல கடடிடக்கலை வல்லுனர்களையும், அவர்களிடம் இருந்த கட்டடங்களின் வரைபடங்கள் அதில் வண்ணம் தீட்டுவது போன்ற விஷயங்களாலும்,  கட்டடங்கள் மீதான ஆர்வத்தை வளர்த்துக் கொண்டவர் இவர். அதைப் போலவே தந்தையுடன் பயணித்து பல பழமையான கட்டடங்களையும், அதன் வடிவமைப்பு பற்றியும் நிறைய பேசியதிலிருந்து நமக்கான எதிர்காலத்தை இதில் உருவாக்கிக் கொள்ள முடியும் என்று எண்ணி, கீழக்கரை முகமது சதக் கல்லூரியில் இவருக்கு இளங்கலை கட்டடக்கலையும், கன்னியாகுமரி   சிக்மா கல்லூரியில் முதுகலையும் கட்டடக்கலையிலும் முடிகின்றார். இந்த முன்னுரைக்கு சொந்தக்காரர் கட்டடக்கலை வல்லுனர் திரு. விவேக் சோலை ராஜா அவர்கள்.

இவருடைய ஆசிரியர் திரு பாலகிருஷ்ணன் அவர்கள் பள்ளியில் மாணவர்களை ஊக்குவிப்பதைப் போலவே கட்டடக்கலை படிக்கும் பொழுதும் இவரை ஊக்குவித்து, வளர்த்துக் கொள்ள பெரிதும் துணை புரிந்திருக்கிறார்.  கல்லூரியிலும்  வரைகலை மற்றும் கட்டடக்கலை கோட்பாடுகளை இணைத்து படங்கள் வரைவதிலும், காலநிலை மாற்றங்களை மனதில் கொண்டு அதற்கு ஏற்ப வடிவமைப்பு செய்வதிலும் நிறைய கவனம் செலுத்தியிருக்கிறார்.  கல்லூரியில் பயிலும் சமயத்தில் பல கட்டடக்கலை சார்ந்த Birla White,  Transperance, Urban design  போட்டி களில் பங்கெடுத்து வெற்றி பெற்றிருக்கிறார். தன்னுடைய தொழில் முறை பயிற்சி காலத்தில் பல கட்டடக்கலை அறிஞர்களைப் பற்றி அறிந்து கொள்ள வாய்ப்பு கிடைத்துள்ளது. பி.வி தோஷி( B. V. Doshi) அவர்களைப் பற்றி அவருடைய மூத்த கட்டடக்கலை அறிஞர் நிறைய தகவல்களை பகிர்ந்ததோடு, அவருடைய வரைக்கலையின் ஆர்வத்தையும் பயன்படுத்தி பல போட்டிகளில் பங்கேற்று இருக்கிறார். 

இளங்கலை கல்வியை முடித்துவிட்டு அலுவலகத்தில் சேர்ந்த பொழுது, தன்னுடைய வரையும் திறமையால் பல்வேறு விதமான போட்டிகளில் பங்கு பெற்றதோடு, சிறப்பு கவனத்தையும் பெற்றிருக்கிறார்.  அதில் முக்கியமானது இன்போசிஸ் (Infosis) நிறுவனத்தின் அருங்காட்சியகம்! தான் கைகளால் வரைந்த ஓவியங்கள் திரு.நாராயண மூர்த்தி அவர்களுக்கு பிடித்து, அதை தேர்வு செய்து அந்த வடிவமைப்பையே கட்டலாம் என முடிவெடுக்கப்பட்டது. அதில் இவருடைய வரைகலை திறமை பெரிதும் பாராட்டப்பட்டது. அதன் பிறகு பலதரப்பட்ட கட்டடக்கலை அனுபவங்களை பெறுவதற்காக துபாயிலும், மோட் (Moad) திரு.மகேஷ் இராதாகிருஷ்ணன் அவர்களின் அலுவலகத்திலும் பணிபுரிந்துள்ளார். அதன் பிறகு சிக்மா கல்லூரியில் முதுகலையை முடித்துவிட்டு, கட்டடக்கலை கட்டடக்கலை ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். 

தன்னுடைய நண்பனான ஆண்ட்ரூஸ் உடன் சேர்ந்து ஒரு கட்டடக்கலை நிறுவனத்தையும் நடத்தி வருகிறார். அதன் மூலமாக சென்ற ஆண்டு ராமேஸ்வரத்தில் ஒரு நூலகம் வடிவமைப்பை செய்து அதை பன்னாட்டு கட்டடக்கலை போட்டிக்கு அனுப்பியதில், முதல் 10 இடங்களுக்குள் தேர்வாகி இருக்கிறது என்பதை மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டார்.

அவர் நமக்கு பல வகையான படங்களை அனுப்பி இருந்தார். அதில் முக்கியமாக கட்டடக்கலை வகுப்பறைகளில் அதிகம் பேசப்படும் கான்டெக்ஸ்ட்( Context) என சொல்லப்படுகிற நில அமைப்பு சார்ந்த படங்கள் நம் கவனத்தை ஈர்க்கிறது. எப்பொழுதும் சுற்றுச்சூழலில் என்ன இருக்கிறது, இந்த கட்டடம் தன்னுடைய சூழலுக்கு அதை எப்படி தகவல் வைத்துக் கொள்ளும் என்ற கேள்வியோடு எங்களுடைய வடிவமைப்பு ஆரம்பிக்கும். ஆனால் இதிலிருந்து சிறிது மாறுபட்டு ஒரு சிறு பிள்ளையின் மனநிலையை போல, நாம் சின்ன வயதில் நம்முடைய புத்தகத்தில் உள்ள மனிதர்களோ, இடங்களோ அதன் சூழலை மாற்றக்கூடிய வகையில் சில விஷயங்களை மாற்றி வேறு விதமாக பார்க்க ஆசைப்பட்டு இருக்கிறோம். அதேபோலவே நாம் பார்க்கும் பல கட்டடங்களை வேறு சூழலில், வேறு நிலமைப்பில் வைத்துப் பார்த்தால் எப்படி இருக்கும் என்பதான ஒரு கண்ணோட்டத்தில் இந்த படங்களை அமைத்திருக்கிறார். தஞ்சாவூர் பெரிய கோவில், திருச்செந்தூர் முருகன் கோவில் அல்லது துபாயில் உள்ள மெட்ரோ ட்ரெயின் சென்னை யில் ஓட விட்டால் எப்படி இருக்கும் போன்ற ரீதியில் இந்த படங்கள் வடிவமைக்கப்பட்டிருக்கின்றன. ஒரு வகையான சூழலில் இருந்து, இன்னொரு விதமான சூழலுக்கு நம் கண்ணோட்டத்தை மாற்றி அமைக்கும் படியான ஒரு முயற்சி இது!

இவருடைய படங்களில் நாம் அதிகம் பார்க்கும் குதிரைகளுக்குப் பின்னும் பல சுவாரஸ்யமான தகவல்கள் உள்ளன. கிராமங்கள் சார்ந்தும், அங்கு வாழும் மனிதர்கள் சார்ந்தும் உள்ள கட்டடக்கலை இன்றும் காரண, காரியங்களோடு (Rational) தங்களுடைய இடத்தை வடிவமைத்துக் கொள்ளும் பாங்கில் அமைந்துள்ளது. பல இடங்களில் இத்தகைய வடிவமைப்பு கோட்பாடுகளை பின்பற்றாவிட்டாலும், இன்னும் அத்தகைய பாரம்பரிய வடிவமைப்பு கோட்பாடுகளுடன் விளங்குவது கிராமங்கள் தான். அதனாலேயே இதன் மீது அவருக்கு மிக அதிக ஆர்வம் ஏற்பட்டு இருக்கிறது. தன்னுடைய இளங்கலை தீசிஸ் ( Thesis) ஆக எடுத்து ஆராய்ச்சியும் வடிவமைப்பும் செய்து இருக்கிறார்.

கிராமங்களின் மீது நமக்கு இருக்கும் கண்ணோட்டம் பழமை என்ற ரீதியில் இருந்தாலும், அவர்களுடைய வாழ்க்கைக்கு தேவையான புதுமையான விஷயங்களை எடுத்துக் கொண்டே அவர்களுக்கான வடிவமைப்பை அவர்கள் செய்து கொண்டிருக்கிறார்கள். அப்படி அவர்களின் வாழ்வியலோடு இணைந்தது தான் இந்த குதிரை! தாங்கள் வழிபடும் தெய்வங்களாக இருந்தாலும், தங்கள் வீடுகளின் அலங்காரப் பொருட்களாக இருந்தாலும், தங்களின் வாழ்வாதாரத்தில் மிகப்பெரிய ஒன்றாக குதிரைகளை கருதுகின்றனர். அதுவும் போக்குவரத்திற்கு என்று பெரிய வண்டிகள்  உருவாக்காத காலகட்டத்தில், குதிரைகள் ஓரிடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு செல்வதற்கு பெரிதும் துணை புரிந்து இருக்கின்றது. அதை ஒரு ஆளுமையாக கருதும் எண்ணம் மக்களிடையே இருந்துள்ளது.

அதைப்போலவே நம்மூர் மக்களிடையேயும், நம் தெய்வங்கள் இடையேயும் நாம் பார்க்கும் இன்னொரு விஷயம் மீசை. வெளிநாடுகளுக்கு பிரயாணம் செய்யும் பொழுது பலர் மீசையை பார்த்து கேட்கும் கேள்வி தமிழ்நாடு? அல்லது கேரளா? என்பதுதான். இது நம்முடைய இடத்தின் அடையாளமாக காணப்படுகிறது என்ற எண்ணத்திலேயே இதை ஆவணப்படுத்த தொடங்கி இருக்கிறார்.

இன்னும் பல சுவாரஸ்யமான தகவல்களுடன், படங்களுடன் அடுத்த பகுதியில் தொடரலாம். … . 

 

 

மறுமொழி இடவும்